About

Wednesday 3 August, 2011

கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 4858 பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு அரசு ஒப்புதல்

தமிழகத்தில் கடந்தகல்வி ஆண்டின் இறுதியில் தேர்வு செய்யப்பட்டோரின் திருத்திய பட்டியலை தயார் செய்து, ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் இறுதியில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 6 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். வேலை வாய்ப்பு அலுவலக "சீனியாரிட்டி' பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பணி நியமன உத்தரவு வழங்குவதற்குள் சட்டசபை தேர்தல் வந்ததால், அனைத்து செயல்பாடும் நின்று போனது. இந்நிலையில் பணி நியமனம் தொடர்பாக அரசு புதிய உத்தரவிட்டு (அரசாணை எண்: 105) உள்ளது.


 
அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தில், விடுபட்டோரை அழைத்து சான்றிதழ் சரிபார்த்து மீண்டும் தேர்வானோர் பட்டியலை இணையதளம் மூலம் வெளியிட வேண்டும். தேர்வானோருக்கு ஆணைகள் அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையில் 268, மதுரை மாநகராட்சிக்கு 10 பணியிடங்களுக்கும் 2009-10ல் பரிந்துரைக்கப்பட்டோரை நிரப்ப அரசால் அனுமதிக்கப்பட்டதால், இப்பணியிடங்களையும் தேர்வு செய்ய அரசின் உத்தரவை வேண்டியுள்ளனர்.

வேலை வாய்ப்புத் துறை இயக்குனரின் 12.1.2010 மற்றும் 27.9.2010 நாளிட்ட கடிதங்களில் சிபாரிசு செய்துள்ள பதிவுமூப்பு அடிப்படையிலான பட்டியலின் செல்லுபடி காலம் 26.9.2011 வரை உள்ளதால், அப்பட்டியலில் இருந்து காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கருத்துருவை அரசு பரிசீலித்து, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2636 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 1029 பணியிடங்கள் என மொத்தம் 3665 பணியிடங்களை, விடுபட்டோரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்த்து, திருத்திய பட்டியல் தயாரித்து வெளியிடலாம். ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள 266 காலிப் பணியிடங்கள், மதுரை மாநகராட்சியில் உள்ள 10 பணியிடங்களையும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டோரில் இருந்து நிரப்பிக் கொள்ளவும் அரசு ஆணை வெளியிடுகிறது, என உத்தரவில் தெரிவித்துள்ளனர். 

நன்றி : தினமலர்

1 comment:

Note: only a member of this blog may post a comment.