About

Sunday 8 November, 2009

3,500 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு பரிசீலனை

தமிழகத்தில் 3,500 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.  தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தென் மண்டல மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமைவகித்தார்.  இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:  ஆண்டுதோறும் 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களுக்கான பிரச்னைகளை முதல்வர் கருணாநிதி பரிசீலித்து தீர்வு கண்டு வருகிறார்.  தமிழகத்தில் வேலைவாய்ப்புத் துறை மூலம் ஆசிரியர்கள் நியமனம் முறையாக நடைபெற்று வருகிறது. இதனால், கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னேறியுள்ளது.  மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் உரிய வகையில் ஆராய்ந்து நிறைவேற்றித் தரப்படும்.  ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை முதல்வர் நியமித்துள்ளார். விரைவில் அதன் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு முதல்வர் கருணாநிதி இவ் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்.  மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிடும் வகையில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்துரு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அரசு இதை பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

Tuesday 3 November, 2009

ஆசிரியர் பயிற்றுனர் 564 பேர் நியமனம்

                          அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (SSA)  564 ஆசிரியர் பயிற்றுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இத்திட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்த 572 பேர் உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால், 915 பயிற்றுனர் பணியிடங்கள் காலியாகின. இதில், 351 பணியிடங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 564 பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார்.