About

Friday 7 August, 2009

இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வினால் 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பறிபோகும் நிலை !!!

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் தகுதி வாய்ந்த 3,000 பேருக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்,'' என்று துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் பலர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதியைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


பட்டதாரி ஆசிரியர் நிலையில், பாடவாரியாக உள்ள காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும், 3,000 இடைநிலை ஆசிரியர்கள், பதவி உயர்வு செய்யப்படுவர். தொடக்க கல்வித்துறையில் இருந்து, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் கேட்டு 3,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மனு கொடுத் துள்ளனர்.


அவர்களுக்கு, துறை சார்பில் என்.ஓ.சி., வழங்கப்பட்டுள்ளது. இவர்களை, துறை மாறுதல் செய்வதற்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை விரைவில் மேற்கொள்ள உள்ளது. இதையடுத்து ஏற்படும் காலி பணியிடங்கள், பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் முலம் நிரப்பப்படும் என்று, துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

Wednesday 5 August, 2009

அரசு பள்ளிகளில் 6,500 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

                              அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் இடங்களை நிரப்ப த‌‌மிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் மற்றும் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில், கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை 6,500 இடங்கள் காலியாக உள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று, காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, முதுநிலை ஆசிரியர்கள் 1,474 பேர் நியமிக்கப்படு‌கிறா‌ர்க‌ள். அவர்களில் 731 பேர் நேரடி நியமனம் மூலமும், 743 பேர் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படு‌கிறா‌ர்க‌ள்.

பட்டதாரி ஆசிரியர்கள் 4,604 பே‌ர், சிறுபான்மை மொழிப் பாட ஆ‌சி‌‌‌ரிய‌ர்க‌ள் 167 பே‌ர், உடற்கல்வி ஆசிரியர் 143 பே‌ர், ஓவிய ஆசிரியர் 51 பே‌ர், இசை ஆசிரியர் 10 பே‌ர், தையல் ஆசிரியர் 20 பேர் நியமிக்கப்படு‌கிறா‌ர்கள்.

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலி இடங்களில் நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 165, கோவை 31, மதுரை மாநகராட்சியில் 62 ஆசிரியர்கள் நியமிக்கப்படு‌கிறார்கள்.

இவர்களில் 29 முதுநிலை ஆசிரியர்கள், 155 பட்டதாரி ஆசிரியர்கள், 7 சிறுபான்மை பட்டதாரி, 62 உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவியம் இசை ஆசிரியர்கள் 5 பேர் நியமிக்கப்படு‌‌கிறா‌ர்க‌ள்.

Tuesday 4 August, 2009

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., வகுப்பிற்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு தேசிய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.


இது தொடர்பாக ஆசிரிய பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ) கூறியுள்ளதாவது: ' அனைவருக்கும் கல்வி இயக்கம், 14 வயது வரை கட்டாயக் கல்வி போன்ற மத்திய அரசின் கொள்கைகளால், ஆரம்பக் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டதால் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வியில் பயன் அதிகரித்துள்ளது.


இதனால், ஆசிரியர்கள் தேவை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்க துவங்கியது. ஆசிரியர்களுக்கு அதிக சம்பளத்தை அரசு வழங்குவதால் 70 சதவீதம் பேர், கல்லூரிப் படிப்பை முடித்து, பி.எட்., சேர்கின்றனர். இதனால், புற்றீசல் போல், பி.எட்., கல்வி நிறுவனங்கள் அனுமதி வாங்காமல் செயல்படத் துவங்கின.


இவற்றை தடுக்கவும், தேவைப்படும் ஆசிரிய ஆற்றல் தொடர்பாக கணக்கெடுக்கவும், ஆசிரிய கல்வி வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பி.எட்., படிப்பிற்கு அனுமதி வழங்கும் மத்திய அரசின் தேசிய கவுன்சில், தமிழகத்தில் 2010-2011க்கான பி.எட்., வகுப்புக்கள் நடத்த அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.


 பி.எட்., மட்டுமல்லாமல் டி.எட்., உடற்பயிற்சி கல்வி தொடர்பான பட்டயம், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு போன்றவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டோடு, பி.எட்., படிப்பு தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது. இந்த தடை உத்தரவு மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

Saturday 1 August, 2009

அரசு பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் நியமனம் : விரைவில் போட்டித் தேர்வு

             
                    அரசு பொறியியல் கல்லூரிகளில் 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்ய, விரைவில் போட்டித் தேர்வு நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான விண்ணப்பங்கள் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும் என்றும், போட்டித் தேர்வு செப்டம்பரில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் விரைவில் வெளியீடு




முதுகலை ஆசிரியர்கள் 250 பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் ஒதுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், 250 பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிலுவையில் இருந்தன.


இதை நிரப்ப, கடந்த மாதம் 23, 24ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. 900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், 400 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெறும் வயதை நெருங்கியவர்கள் என பல்வேறு காரணங்களால் 500 பேர் கலந்து கொள்ளவில்லை.

 இதையடுத்து, 400 பேரில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் 250 பேரை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுமென ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களில் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள 294 பணியிடங்களை நிரப்ப, தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு இயக்குனரகத்திடம் கேட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்